உணவு நெருக்கடியில் எவரும் பசியோடு வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் இன்று (17) காலை பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடும் என்றாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் பிரதமர் பணிப்புரை விடுத்ததுடன், இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் திட்டத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாம் விரும்புவதாகவும் வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள 336 பிரதேச செயலகங்களின் இலக்குகளை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை அடைவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக 225 பிரிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் எஞ்சியவை அமைச்சுக்கள் மற்றும் தனியார் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார
இதற்கென பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளவும் முன்மொழியப்பட்டது. மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் மேலும் அறிவுறுத்தினார்.
குறிப்பாக குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
பிராந்திய ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.