தமது கருத்துக்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்து விளக்கமளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் முரண்பட்ட கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
நாட்டுக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்ததாக கூறி, அதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கான இரங்கல் விவாதத்தின் போது, பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
எனினும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், பிரதமர் சபைக்கு தவறான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில், வன்முறையை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிப்பதாகவும், வன்முறையைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிடவில்லை என்றும் சாணக்கியன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தாம், அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காகவே தாம் குரல் கொடுத்துள்ளதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமது கருத்தை பிரதமர் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், வன்முறைச் செயல்முறைக்கு ஆதரவளிப்பதாக உணர்ந்ததாகவும் சாணக்கியன், தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை எனவும், பொது மக்கள் அத்தகைய குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.