மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 10 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மத்தள விமான நிலையம் ஒருபோதும் விற்கப்பட மாட்டாது என்றும், நல்ல முதலீட்டாளருடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு விமான நிலையத்தை புனரமைத்து இலாபகரமான கூட்டு முயற்சியாக அரசு மற்றும் தனியார் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது விமானங்கள் வராத இந்த விமான நிலையத்திற்கு 545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் கொழும்பில் இருந்து மத்தளைக்கு தினமும் பேருந்தில் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் சம்பாதித்த பணத்தில் இன்று மத்தள விமான நிலையம் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான தவணைகள் இன்னும் செலுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை விமான நிலையத்தை பார்க்கிங் இடமாகவும், விமான பராமரிப்பு மையமாகவும் பயன்படுத்த விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நமது நாட்டில் தற்போது நிலவும் சமூக சூழல், எரிபொருள் மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விமான நிலையத்தை பயன்படுத்த தயங்குவதாக அவர் கூறினார்.
மேலும் அவர்களை ஈர்ப்பது எளிதல்ல, ஆனால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.எஸ். ஏ.சந்திரசிறி பெரும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் மத்தள விமான நிலையத்தை நஷ்டம் ஏற்பட்டாலும் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.