சிறுபான்மையினரைப் பற்றியும், முகமது நபி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்திய மத்திய அரசின் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பா.ஜ.க ஊடகத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோருக்கு எதிராக குவைத் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று குவைத் வெளியுறவு அமைச்சு விடுத்த அழைப்பின் பேரில் குவைத்துக்கான இந்தியக் குடியரசின் தூதுவருக்கும் ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை பிரதி அமைச்சருக்கும் மத்தியில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது இந்தியத் தூதுவரிடம் குவைத் அரசாங்கம் இந்த கண்டன அறிக்கையை கையளித்தது.
இதன்போது, நபிகளார் பற்றிய அபத்தமான அவதூறுகளை முற்றாக நிராகரித்து அதற்கெதிராக கடும் எதிர்ப்பும் ஆட்சேபனையும் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நபிகாளர் மீது அவதூறுகளை கூறிய அதிகாரியை கட்சியிலிருந்தும் பணிகளில் இருந்தும் இடைநிறுத்தி வைத்துள்ளமைக்கு குவைத் வெளியுறவு அமைச்சு வரவேற்கும். அதே வேளையில், அபத்தங்களை வெளியிட்ட அந்த அதிகாரி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய மத நிந்தனைகளையும் அவதூறுகளையும் பரப்புபவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் தண்டனையும் வழங்காமல் விட்டுவிடுவதானது தீவிரவாதத்தையும் வெறுப்பையும் கசப்புணர்வுகளையுமே வளர்த்து விடுகிறது.
மேலும், நீதி, நியாயத்தின் பெறுமானங்களை எல்லாம் மலினப்படுத்தி விடுகிறது, உண்மையில் இறை தூதர் பற்றி அவதூறு பரப்பும் இத்தகைய அறிக்கைகள் இஸ்லாம் கூறும் சாந்தி, சமாதானம், சகிப்புத்தன்மை பற்றிய அறிவின்மையை எடுத்துக் காட்டுவதாக கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா உட்பட உலக நாடுகளில் நாகரிகங்களை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாம் ஆற்றியுள்ள காத்திரமான பங்களிப்புக்கள் பற்றிய அறிவீனத்தையுமே அது பிரதிபலிக்கிறது எனவும் குவைத் தூதரகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.