சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் நிதி செயலாளரைத் தடுக்க முயன்றதாகக் கூறி, தனிநபர்கள் குழு ஒன்று நிதி அமைச்சகத்தை சுற்றி வளைத்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிகளை சீர்குலைப்பதற்கு அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் உண்மையான மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் குழுக்களின் ஒரு பகுதி அல்ல, மாறாக மறைமுக அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘நாட்டில் போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை மற்றும் நிறுத்தப்படாது, இருப்பினும், பொருளாதார நெருக்கடியால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், பொருளாதார மீட்பு முயற்சிகளை சீர்குலைக்க இதுபோன்ற குழுக்களை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சியின் நலனுக்காகவும் அல்ல, மாறாக இலங்கையின் அனைத்து பிரஜைகளின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலத்திற்காகவும் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்படுவது இன்றியமையாதது’ என்று அவர் கூறினார்.
இலங்கைக்கான நிதி உதவி தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் இன்று நாட்டிற்கு வந்துள்ளது.
மேலும், 2020 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான், நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு செல்ல வேண்டும் என்று ஐ.தே.க முதலில் கூறியது.
அதைச் செய்ய முன்னாள் அரசு காலதாமதம் செய்தது. இது நமது தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் நிதிச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் தாமதத்திற்குப் பின்னர், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் வேளையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார், என்று அவர் மேலும் கூறினார்.