காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் மறித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று நள்ளிரவு ஜனாதிபதி செயலகத்துக்கான மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்து மாடிகளை அமைத்தனர்.
இதன்படி ஜனாதிபதி செயலகத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அலுவலகங்களுக்குள் செல்லவோ, வெளியே வரவோ முடியாத நிலை உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
நிதி அமைச்சின் கதவுகள் முற்றுகையிடப்பட்டமையினால் நிதி அமைச்சின் செயலாளர் சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர்களுடன் நடாத்தவிருந்த கலந்துரையாடலுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸ் லொறியில் ஏற்றி பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர்களில் ஒரு பிக்கு நான்கு பெண்கள் மற்றும் 16 ஆண்கள் உள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள வீதியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இதேவேளை சமூக ஆர்வலர் அனுருத்த பண்டாரவும் சம்பவ இடத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டமை அவரது முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.