அதிமேதகு’ என்ற சொல்லை தடை விதிப்பதாகவும், ஜனாதிபதியை அழைக்கும் போது, இனி ‘அதிமேதகு’ என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பதவியேற்ற பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியின் கொடி ஒழிக்கப்படும் எனவும், ஒரு நாட்டில் ஒரே கொடியே இருக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தேசம் ஒரே கொடியின் நிழலில் இருந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்த குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன். அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட தயாரில்லை.
மக்களுக்கு போராடும் உரிமை உள்ளது. வன்முறையை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.
போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம் எனவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.