காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ மக்கள் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதியை நீக்க முடிந்தமை மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றி என போராட்டத்தின் செயற்பாட்டாளர் ஜிவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல, போராட்டத்தின் செயல்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் என அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் தற்போதைய அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி ஏப்ரல் 9ஆம் திகதி இந்த மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நேற்று (ஜூலை 16) போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போராட்ட களத்தில் சிறப்பு கொண்டாட்ட விழா நடைபெற்றது.
போராட்டம் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (ஜூலை 17) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.