எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (12ம் திகதி) மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான சுமார் 3000 தனியார் பேருந்துகள் தமது நாளாந்த பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஒரு இடத்துக்கு பஸ் வந்து மற்றுமொரு இடத்திற்கு செல்ல எரிபொருள் தீர்ந்து போகும் நேரங்களும் உண்டு என விஜித குமார தெரிவித்தார்.
டீசல் பற்றாக்குறையால் பேருந்துகள் இயங்குவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயணிகளும், பேருந்து உரிமையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சுமார் 3200 மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், ஆனால் (12) சுமார் 200 பேருந்துகள் மட்டுமே இயங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல நாட்களாக வரிசையில் நின்றாலும் நீண்ட தூர சேவைகளுக்கு எரிபொருள் போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைதூர சேவை பஸ்களுக்கு 120 முதல் 150 லீற்றர் வரையான எரிபொருள் தேவைப்படுகின்ற போதிலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 40 முதல் 80 லீற்றர் வரையான எரிபொருள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.