முகக் கவசம் அணிவது கட்டாயமில்லையென்றாலும், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் பழகும் போது ஏனைய சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் முகக் கவசம் அணிதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் 10 ஆக பதிவாகியிருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் மீண்டும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸுடன் டெங்கு இன்புளுவன்ஸா வைரஸ் போன்ற தொற்றுக்களும் அதிகரித்து வருகின்ற அதேநேரத்தில் கொரோனா வைரஸ் போன்றவற்றில் பாதுகாப்புக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
முக்கியமாக 60 வயதுக்கு அதிகமானவர்கள் 4ஆவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் 3ஆவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்கள் மிக விரைவாக தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.