பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது!

Date:

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

நாம் நமது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். நமது தேசம் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் இக்கட்டான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அல்லலுறுகின்றனர். ஆனால், எமது நாட்டின் அரசியல் தலைமையானது நாட்டை ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை நோக்கி இட்டுச் செல்வதில் பரிதாபகரமாய் தோல்வியடைந்துவிட்டது. இராஜபக்ஷ ஆட்சியின் தவறான சிந்தனை மற்றும் தன்னிச்சையான கொள்கைகளும், அவ்வாட்சியின் முத்திரையாக அடையாளப்படுத்தப்பட்ட ஊழல் மற்றும் வன்முறை ஆகியவையுமே இந்த தோல்விக்கான முக்கிய காரணங்கள் எனலாம்.

இது ஒரு வரலாற்று தருணம். ஒரு வரலாற்றுப் பணியைச் செய்ய இன்று நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில் இருந்து தேசத்தை மீட்க வழிகாட்டுவதற்கும் மக்கள் சார்பாக செயற்படுவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள், இன்று தேசத்தின் அரச ஆளுமையை வெளிப்படுத்துவதோடு சிறிய வேறுபாடுகளையெல்லாம் கடந்து உயர வேண்டிய காலமிது. அன்றி அரசியல் சச்சரவுகளுக்கும் அதிகார தரகிற்கும் உகந்த நேரம் இதுவல்ல. நீங்கள் நேர்மையுடனும் பொறுப்புடனும் செயல்படத் தவறும் பட்சத்தில் கிட்டும் பெறுபேறுகளின் விளைவுகளால் நம் தேசம் பேரழிவுக்குள்ளாகும் நிலையேற்படுவதோடு அந்நிலையிலிருந்து நம் தேசத்தை இலகுவில் மீட்டுக் கட்டியெழுப்ப முடியாத நிலையும் தோன்றலாம்.

நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

🔴 நிதி மோசடி மற்றும் ஊழல் மீது குற்றம் சாட்டப்படாத, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திராத, பாராளுமன்றத்திற்கு பொறுப்புடைய, சனநாயகத்தை பின்பற்றும், மற்றும் எவ்வித மனித உரிமை மீறல் வரலாற்றைக் கொண்டிராத, சிவில் உரிமையை பறித்தமைக்காக குற்றம் சாட்டப்படாத ஒருவரே சனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

🔴 தேர்தல்கள் நடத்தப்படும் வரை, அனைத்து வேறுபாடுகளையும் கைவிட்டு, சர்வகட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும்.

🔴 சர்வ கட்சிகளின் இடைக்கால அரசாங்கமானது, அதன் பதவிக் காலத்தில் ஏனைய குழுக்களுடனும், தொழில்சார் மற்றும் உழைக்கும் மக்களின் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து செயற்பட வேண்டும், இதனூடாகவே, கடினமான இக்காலகட்டத்தை நாம் ஒன்றாக சமாளிக்க முடியும்.

மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பதவி விலகுவது குறித்து சிந்திக்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கை மூலம் பதில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலிருந்து தப்பிச்சென்ற இழிவான ஜனாதிபதியால், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...