அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களினால் நாடு முழுமையான முடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என பல மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நாளைய தினம் கொழும்பை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜூலை 9 ஆம் திகதி முழு நாடுமுழுவதும் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 9 ஆம் திகதி பலமாக விளங்குவதற்கு ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும் கொழும்புக்கு வரவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.