வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துப் பொருட்கள் உடனடியாக விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வந்த ஜனாதிபதி, விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த நடிகர் ஜாக்சன் அந்தோனியின் நலம் விசாரித்தார்.
அதன்பின்னர், தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.கே.விக்கிரமாதித்தனை சந்தித்து வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பற்றாக்குறையான மருந்துகளை விரைவாக பெற்றுக் கொடுப்பது தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தாம் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நோயாளிகளின் வாழ்வில் தமக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும், மருந்துப் பற்றாக்குறையை மிக விரைவில் தீர்த்து, மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை அனுபவிக்க வாய்ப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்சன் அந்தோணியின் நலம் விசாரித்துவிட்டு வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்த ஜனாதிபதி, சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களிடமும் நலம் விசாரித்தார்.