விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வது தொடர்பில் முழுமையான தணிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வதில், குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் இருப்பின், அடுத்த மாத பருவத்தில் உரம் விநியோகிக்கும் பணியில், அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உர விநியோகம் நிறைவடைந்தவுடன் இந்த முழுமையான கணக்காய்வு நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யால பருவத்துக்கான யூரியா உர விநியோகம் 98 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
யூரியா உர விநியோகத்தில் சுமார் 2 வீதமான பணிகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.