இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக காலித் ஹமூத் நாசர் அல்-கஹ்தானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக கடமையாற்றிய அப்துல் நாசர் எச். அல் ஹாரித், கடந்த மார்ச் மாதம் தனது கடமையினை வெற்றிகரமாக நிறைவுசெய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே காலித் ஹமூத் நாசர் அல்-கஹ்தானி நியமிக்கப்பட்டுள்ளதுடன் புதிய தூதுவர், கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் தனது கடமைகளை விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான புதிய சவூதி தூதுவருக்கும், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் அம்சாவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சவூதி அரேபியாவின் தலைநகரான றியாதிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை கட்டியொழுப்புவது தொடர்பில் இரண்டு தூதுவர்களும் விரிவாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.