முஸ்லிம்கள் கலண்டரின் படி பிறந்திருக்கின்ற 1444 வது வருடத்தின் முதல் மாதமாகியா முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஆஷூரா தினம் நாளை திங்கள் கிழமையும் அதனை அடுத்து வருகின்ற தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இத்தினங்களில் நோன்பு நோற்று தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரங்களை தேடிக்கொள்வதும், அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்வதும் முஸ்லிம்களுடைய மிக முக்கியமான வணக்கமாக இருக்கின்றது.
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அரபுமொழியில் அஷரா எனும் பத்தைக் குறிக்கும்.
இஸ்லாத்தின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தானும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். இதன் அடிப்படையில் ரமலானுக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு முக்கியமான நோன்பாகவும் இது கருதப்படுகின்றது.
இதனடிப்படையிலேயே ஆஷுரா தினத்தன்று முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றார்கள். இது இஸ்லாத்தில் கட்டாய கடமையல்ல. இதுவொரு சுன்னத்தாக (நபி நாயகத்தின் வழிமுறை) கொள்ளப்படுகின்றது.