காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் சடலங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நபர்களின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விடயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் சடலங்கள் கரை ஒதுங்குவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், அதிகாரிகளிடமிருந்து எந்த விளக்கமும் இல்லாத நிலையில், இதுபோன்ற உடல்கள் இருப்பது பொதுமக்களின் ஒரு பிரிவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை சட்டத்தரணிகள் சங்கம் அவதானித்துள்ளது.
இதேவேளை, சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை பேணப்படுவதை உறுதி செய்வதற்கும் இலங்கையின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு உறுதி செய்வதற்கும் இவ்விரு விடயங்களையும் அவசரமாக விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் வங்கம் வலியுறுத்தியுள்ளது.