2013 ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 11 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (ஆகஸ்ட் 9) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த குற்றப்பத்திரிகைகளை கையளித்துள்ளார்.
பிரதிவாதிகளை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களது வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பிரதிவாதிகளின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு முற்பட்ட மாநாட்டிற்கு அழைப்பு விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜென்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.