நாட்டில் கொவிட் நோய் பரவும் போக்கு அதிகமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என தொற்றுநோயியல் துறையின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார்.
சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பாதுகாத்தல் மற்றும் தடுப்பூசிகள் அவசியம் என்று இங்கு கூறப்பட்டது.
இதேவேளை, டெங்கு நோயாளர்கள் மற்றும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக விசேட சமூக வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 9 தொடக்கம் 11 மாதங்கள் வரையிலான கொள்வனவு செயற்பாடுகளை 3 முதல் 4 மாதங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
14 உயிர்காக்கும் மருந்துகளும் தற்போது நாட்டில் இருப்பதாகவும், 384 அத்தியாவசிய மருந்துகளில் 100 மருந்துகளில் மட்டுமே பற்றாக்குறை இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் தொடர்பில் மிகவும் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்காக வாரந்தோறும் சுகாதார நிபுணர் சங்கங்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.