நாளாந்த மின்வெட்டு இன்று (ஆகஸ்ட் 15) முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்வெட்டு எப்படி அமுல்படுத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்றும் நாளையும் (ஆக. 16) 1 மணி நேரம் 20 நிமிடம் மட்டுமே மின்வெட்டு இருக்கும்.
இதற்கிடையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில், ஏற்பட்ட கோளாறை அடையாளம் காண தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகின் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்காக மேற்கு கடற்கரை மற்றும் பிற எரிபொருள் ஆலைகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.