பெருந்தோட்ட மக்களுக்கான இணையவழி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவை செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் தோட்ட வீடமைப்புப் பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையானது பதுளை மற்றும் இஹல்கஸ்ஹின்னவை மையப்படுத்தி இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த மருத்துவ சிகிச்சை சேவை திட்டத்திற்கு O – DOC என பெயரிடப்பட்டுள்ளது, மேலும் ஒரு குடும்பத்திற்கு மாதம் 100 ரூபாய் இதற்கு செலவாகும்.
அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், 150க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் சேவைகள் 24 மணிநேரமும் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.