நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான காலநிலையினால் நாட்டின் பல மாகாணங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்படக்கூடிய அவசர அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரவின் ஆலோசனைக்கு அமைய விமானங்கள் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து அனர்த்த நிலைகளை கண்காணிக்க கண்காணிப்பு விமானமும் அனர்த்த பகுதிகளுக்கான நிவாரணங்கள் மற்றும் மீட்பு பணிகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர்களும் விசேட மீட்பு பயிற்சிகள் மேற்கொண்ட விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவும் இரத்மலான, கட்டுநாயக்க மற்றும் ஹிங்குரகொட ஆகிய விமானப்படை தளங்களில் தயார் நிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.