இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் அல்கொய்தா கிளை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான மேலும் ஒரு மத்ரஸா புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, அஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படுவோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜக அரசுகளின் இந்த புல்டோசர் கலாசாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்திருந்தன.
இதனையடுத்து அஸாம் மாநில அரசும் இது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. கடந்த மாதம் அஸாமில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 11 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஸாம் மாநிலத்தில் வெவ்வேறு பெயர்களில் அல்கொய்தாவும் அதன் சார்பு இயக்கங்களும் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.
மேலும் அண்மையில் அஸாமின் கோல்பரா மாவட்டத்தில் மேலும் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர்.
அஸாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் அஸாமில் பதுங்கி இருந்த 37 பயங்கரவாதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்கொய்தா இயக்கத்துடன் இணைந்து தாக்குதல் சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் மத்ரஸா எனப்படும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை நடத்திய மதகுருமார்களும் அடக்கம்.
இதனால் அஸாமில் இத்தகைய மத்ரஸாக்களை மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறது.
ஏற்கனவே அஸாமில் 2 மதராசாக்கள் இடிக்கப்பட்டன. இந்நிலையில் Bongaigaon மாவட்டத்தில் இயங்கி வந்த Markazul Ma-Arif Quariayana மத்ரசாவும் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.
அஸாமில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்குள்ளாகி இடிக்கப்படும் 3-வது மத்ரஸா இதுவாகும்.
இதேவேளை அசாம் மாநிலத்தில் தனியார் மத்ரஸா இடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘மத்ரஸாவை அரசு இடித்து அப்புறப்படுத்தியதை உறுதி செய்த அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பயங்கரவாதிகளின் மையமாக இவை உள்ளதாலேயே இடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.