பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், டெலிவரி ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.
குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர்.
இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
அதன்படி நகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வெண்டிங் மிஷின்கள் எனப்படும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த உணவு இயந்திரங்கள் செப்டம்பர் 17முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அரபி ரொட்டி மற்றும், ‘பிங்கர் ரோல்’ ஆகிய 2 வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன.
இந்த இலவச உணவு திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் மட்டுமின்றி தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
உணவுத்தேவைப்படும் எந்தவொரு நபரும் இந்த இயந்திரத்தில் ஒர்டர் பட்டனை அழுத்தினால் உடனடியாக உணவு தயார் செய்யப்பட்டு விநியோகிப்படுகின்றது.