எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மாவின் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பேக்கரிகள் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபா வரையில் அதிகரித்தால், 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 350 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தாங்களும், நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.