பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹெயினடிகும்புர ஆகிய இடங்களில் இருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த சேவை அமையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இது 23ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரில் காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் ஜென்சோ பவர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் இணைந்து இந்தப் பயணிகள் படகுச் சேவையை ஆரம்பித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கையில் சோலர் பேனல்கள் மூலம் இயக்கப்படும் முதலாவது படகு சேவை இந்த பயணிகள் படகு சேவை என குறிப்பிட்டுள்ளார்.
சோலர் பேனல்கள் மூலம் இயக்கப்படுவதால் இது 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளில் இவ்வாறான படகுச் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக்களை கவரும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோலர் பேனல்கள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கும் மின்சார நெருக்கடிக்கும் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படகுகள் பத்தரமுல்லை தியன உயன மற்றும் அக்கொன-ஹினடிகும்புரவில் இருந்து வெள்ளவத்தை வரை 30 நிமிடங்களுக்குள் சென்றடையலாம்.
அதேபோன்று பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை ஒருவரிடமிருந்து 200 ரூபாவும், அகோன, ஹெயினடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை ஒருவரிடமிருந்து 300 ரூபாவும் அறவிடப்படும்.
இந்த படகு சேவையானது தினசரி அலுவலக நேரங்களில் இயங்கும்.மற்றும் ஒரு படகில் 8 பேர் பயணம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.
மேலும், பத்தரமுல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், கேட்வே இன்டர்நேஷனல் பாடசாலை, நாவல திறந்த பல்கலைக்கழகம், 176 பஸ் பாதை, 138 மற்றும் 122 பஸ் பாதைகள், வெள்ளவத்தை புகையிரத நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த படகு சேவை மூலம் எளிதாக செல்ல முடியும்.