பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு, ஆர்.எஸ்.எஸ்.,சின் தொண்டு அமைப்பான, சேவா இன்டர்நேஷனல் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
அதற்கமைய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை, நடுத்தர மக்களால் கூட வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்ததால், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து, மக்கள் சூறையாடும் அளவுக்கு நிலைமை மோசமானது.
அதேநேரம், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மஞ்சள் தூள் போன்ற உணவு பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால், நுவரெலியா, கண்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஆர்.எஸ்.எஸ்., தொண்டு அமைப்பான, சேவா இன்டர்நேஷனல், உணவு, மருந்து பொருள்களை வழங்கி வருகிறது.
இது தொடர்பாக, அந்த அமைப்பின் நிர்வாகி விஜயபாலன் கூறுகையில்,
நுவரெலியா, கண்டி, இரத்னபுர, பதுளை, மத்தறை, காலி, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சம் குடும்பங்களை, எங்களின் தன்னார்வலர்கள் வாயிலாக அடையாளம் கண்டு, கடந்த ஏப்ரல் முதல் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கணவரை இழந்து பெண்களை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்களுக்கு, ஆறுமுக நாவலர் அறக்கட்டளையுடன் இணைந்து, உதவிகளை வழங்கி வருகிறோம்.
முதல் கட்டமாக நோட்டன் பிரிட்ஜ், வட்டவலை, புளியாவத்தை, கினிகத்தேனை, பத்தனை, கொட்டகலை, டிக்கோயா, அளுத்தகம, காமினிபுர, பொன்னகர், பண்மூர், பண்டாரநாயக டவுன், உள்ளிட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம் குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான, 25 கிலோ அரிசி, 25 கிலோ மாவு ஆகியவை, இம்மாதம் 8ஆம் திகதி வரை வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.