போதைப்பொருள் கடத்தல்காரர்களால் போதைப்பொருட்களை பாடசாலைகளுக்கு கொண்டுவந்து டோஃபி மற்றும் சொக்லேட் வடிவில் விற்பனை செய்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை டோபி, சொக்லேட் போன்ற இனிப்பு வகைகளில் பாடசாலைகளுக்கு கொண்டு வருவது தெரியவந்துள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கிய முன்னோடித் திட்டம் இவ்வருடம் நவம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
“இந்த முன்னோடித் திட்டம் மதிய உணவு, ஆலோசனை மற்றும் பாடசாலை மாணவர்களின் தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். கொழும்பு மாநகர சபையும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்கும்,” என்று அவர் கூறினார்.
இதேவேளை மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தவணைக்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“தேவையில் 70% சீனாவால் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 30% வழங்க டெண்டர் கோரப்படும்,” என்று அவர் கூறினார்.