ஹஜ் உம்ரா பயணத்தின் போது பெண் யாத்ரீகர்கள் இனி ஆண் பாதுகாவலருடன் செல்லத் தேவையில்லை என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.
அனைவருக்கும் ஹஜ் பயணச் செலவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சவூதி அரேபியா தற்போது அறிவித்துள்ளது.
ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பும் யாத்ரீகர் இனி “மஹ்ரம்” எனப்படும் ஆண் பாதுகாவலர் அல்லது பரிவாரங்களுடன் இருக்க வேண்டியதில்லை.
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபியா இதனைத் தெரிவித்துள்ளார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கெய்ரோவில் உள்ள சவூதி தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபிஆ மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு பெண்ணுடன் மஹ்ரம் செல்ல வேண்டுமா என்ற நீண்டகால சர்ச்சைக்குக்கு முடிவு கட்டப் பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உம்ரா விசாவிற்கு ஒதுக்கீடு அல்லது வரம்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எந்த விசாவுடனும் சவூதி அரேபியாவிற்குள் வாருங்கள். உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்” என்றார்.
மக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்துவதற்கான செலவு ஏற்கனவே கிட்டத்தட்ட 200 பில்லியன் சவூதி ரியால்கள் அல்லது 53 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும் அல்-ரபியா கூறினார். இது வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த விரிவாக்கமாகும்.
ஹஜ் அமைச்சரின் முன்னாள் ஆலோசகர் ஒருவர், கருத்துத் தெரிவிக்கையில்,சவூதி அரேபியாவின் 2030 தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காகவே இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இஸ்லாத்தின் சட்டத்தின் பிரகாரம் பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் துனையின்றி ஹஜ் உம்ரா வணக்கங்கள் உட்பட நீண்ட பிரயாணங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டதாகும்.
மூலம்: அரப் நியூஸ்