நோட்டன் பிரிட்ஜ் நீர்மின் நிலைய நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் நிரம்பி வழியும் மட்டத்திற்கு மிக அருகில் உள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், விமலசுரேந்திர, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய நீர்மின் நிலையங்களில் நீர் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்படும் என மின் நிலைய பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தொடரும் மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மகாவலி, களு மற்றும் களனி ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் பல இடங்களில் அபாயகரமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி ஆற்றின் கிதுல்கல பிரதேசம், கெஹல்கமு ஓயாவின் நோர்வூட் பகுதி, களு ஆற்றின் கலவெல்லவ பிரதேசம், பேராதனை மற்றும் மகாவலி ஆற்றின் நாவலப்பிட்டி பிரதேசங்களில் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.
கித்துல்கல பிரதேசத்தில் இருந்து களனி ஆற்றிலும் பேராதனை பிரதேசத்திலிருந்து மகாவலி ஆற்றிலும் நீர் மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.