தென்கிழக்குப் பல்கலையில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்தின் பட்டப்பின் படிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

Date:

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறையின் பட்டப்பிற்படிப்பு நிகழ்ச்சித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு (08)  பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இப்பீடத்தின் பீடாதிபதியும் இக்கற்கை நெறிகளுக்கான பாடத்திட்டக் குழுவின் தலைவருமான பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் ரமீஸ் அபூ பக்கர் அவர்கள் கலந்து சிறப்பித்த அதேவேளை இந்நிகழ்வின் பிரதம உரையாளராக ஓய்வு பெற்ற பேராசிரியரும் இப்பீடத்தின் முதல் பீடாதிபதியுமான எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இளங்கலைமாணிக் கற்கை நெறிகளுக்கான மாணவர்களையே உள்வாங்கி வந்த இப்பீடம் ஏறத்தாள இரண்டு தசாப்தங்களூடான தனது வரலாற்றில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் பட்டப்பிற்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களான முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிக்
கற்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளமை இப்பீடத்தின் துரித வளர்ச்சி மற்றும் துறைசார் ஆய்வு தொடர்பான அதன் செயலூக்கத்தை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.

இலங்கை முஸ்லிம் சிறுபான்மை சூழமைவின் எதிர்மறையான பொதுப்பண்புகளுள் ஒன்றான ஆன்மீக, அரசியல், பொருளாதார, கல்வி, சமூகம்சார் அம்சங்கள் பொதுவாக அறிவை மையப்படுத்தியதாகவோ ஆய்வு முடிவுகளை முதன்மைப்படுத்தியதாகவோ இல்லாமல் இருப்பதனை சுட்டிக்காட்டிய இப்பீடத்தின்
பீடாதிபதியும் இக்கற்கை நெறிகளுக்கான பாடத்திட்டக் குழுவின் தலைவருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் ஆய்வு பல்கலைக்கழகங்களின் பிரதான பணிகளுள் ஒன்று என்ற வகையில் அதிலும் குறிப்பாக விஞ்ஞான பூர்வமான, மிக நுணுக்கமான, ஆழமான ஆய்வுகளை பட்டப்பின்படிப்பு மாணவர்கள் ஊடாகவே
நிறைவேற்ற முடியும் என்பதைக் குறிப்பிட்டமையானது இப்பீடத்தின் வரலாற்றுப் பாதையில் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தையும் துறைசார் சமூக விஞ்ஞான ஆய்வு தொடர்பான இப்பீடத்தின் கரிசனையும் பறைசாற்றுகின்றன.

அத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யு.எல். அப்துல் மஜீத், இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி ஆர்.ஏ. சர்ஜுன், அரபு மொழித் துறைத் தலைவர் திருமதி எம்.ஸி.எஸ். ஸாதிபா, நூலகர் எம்.எம். ரிபாய்தீன், பீடத்தின் ஏனைய முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், பீடத்தின் உதவிப் பதிவாளர்  பிரஷாந்த், இளங்களை
மாணவர்கள், புதிதாக பட்டப்பிற்படிப்பு கற்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட மாணர்கள், ஏனைய பீடங்களின் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...