அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) நாளை (14) பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட ஆவணமாகும்.
முன்னதாக, இந்த ஆண்டின் கடைசி நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்தார்.
நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் பொருளாதார பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களில் எழுபது வீதமான குடும்பங்கள் நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், இவ்வருட வரவு செலவு திட்டத்தில் அந்த மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடம் நாட்டின் பொருளாதார மீட்சிக்காக பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை உத்திகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் 2024 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தில் இருந்து விடுபட்டு வளமான நாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் (15) ஆரம்பமாகவுள்ளது.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினம் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரட்டிப்பாக்க பாதுகாப்பு பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன் கீழ் இன்று பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.