இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் நிலைமைகள் தொடர்ந்து மோசமடைவதால், ஏனைய முயற்சிகளுக்கு மத்தியில் இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியளிப்பு பிரசாரத்தை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் தெரிவித்துள்ளது.
5.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியின் அவசியத்தில் உள்ளனர். அத்துடன், ஏறக்குறைய 6.3 மில்லியன் இலங்கையர்கள் தங்களின் அடுத்த உணவுக்கு வழி தெரியாமல் உள்ளனர்.
இந்த நெருக்கடியால் சுகாதாரம் மற்றும் உணவு ஆகிய இரண்டு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உணவு விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ளன. சில அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துகள் அரிதாகி, கொள்வனவு செய்வதற்கும் கடினமாகியுள்ளன. இதன் விளைவாக, சில சந்தர்ப்பங்களில், சில அறுவை சிகிச்சைகள் தாமதமாகின்றன.
எனவே, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உலகளாவிய ஆதரவு தேவை. இதற்கான ஒரு முயற்சியாக Rebuild Sri Lanka என்ற நிதி சேகரிப்பு தளத்தை ஐநா அபிவிருத்தி செயற்றிட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனூடாக இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நன்கொடை மற்றும் நிவாரணங்களை வழங்க உலகவாழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?
Rebuild Sri Lanka தளத்தின் மூலம் 5 – 15 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை சுகாதார மற்றும் உணவுத் துறைகளுக்கு உதவலாம்.
இந்த பங்களிப்புகள் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் தற்போதைய பற்றாக்குறையை போக்கவும், உணவுத் தேவையை பூர்த்திசெய்யவும் உதவும்.
எந்தவொரு நாட்டில் இருந்தும் www.undp.org/srilanka/donate என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் ஊடாக இலங்கைக்கு நிதி உதவியளிக்க முடியும் என ஐநா அபிவிருத்தி செயற்றிட்டம் தெரிவித்துள்ளது.