திஹாரியில் சமூக சேவையில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்பட்ட, முன்னாள் ஆசிரியரும், அதிபருமான மதிப்புக்குரிய அல்ஹாஜ் ஏ.பி.எம். அன்சார் அவர்கள் நேற்றிரவு காலமானார்.
அன்னார் திஹாரிய ஜமாதே இஸ்லாமியின் ஸ்தாபக உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து ஊருக்கும் சமூகத்துக்கும் தேவையான மார்க்க ரீதியிலும், பொதுச்சேவைகளிலும் இறுதிவரை உழைத்தவராவார்.
இளைஞர்களுக்கான மார்க்க அடிப்படையிலான தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சிகள், பெண்களுக்கான வாராந்த மார்க்கத் தெளிவு நிகழ்ச்சிகள், ஊரிலுள்ள ஏழைகளை இனம் கண்டு ஸதக்கா, ஸக்காத் போன்றவற்றைப் பெற்றுப் பகிர்ந்தளித்ததுடன், நோன்புகாலத்தில் வறியவர்களுக்கு உலருணவுப் பொதி வழங்குதல் போன்ற பல்வேறு நற்பணிகளை பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் செய்துவந்தார்.
மேலும், திஹாரிய அஹதியா அமைப்பின் முக்கிய பதவிகளில் ஆரம்ப காலத்திலிருந்தே மகத்தான பணிகளைச் செய்தவராவார்.
தான் ஒரு அமைப்பைச் சார்ந்திருந்தாலும், ஊரிலுள்ள சகல இயக்கங்களுடனும், அன்பாகவும், அந்நியோன்யமாகவும் பழகக்கூடியவராகவும் இருந்தார்.
இவரது சேவையில் வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று ‘தன்வீர் அகடமி’ எனும் சிங்கள மொழி மூலமான கல்லூரியைத் திஹாரி மண்ணில் அமைக்கப்பாடுபட்டமையாகும். அன்னாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தகவல்: ஏ.எஸ்.முஹம்மத்.
ஓய்வு பெற்ற பரீட்சை ஆணையாளர்.