உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, அதற்கான நிதியை ஜனாதிபதி நிதியிலிருந்து ஒதுக்குவதாக இன்று (நவ.14) தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 75 மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பைக் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையின் வரலாறு மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
இதேவேளை, அரச வருமானத்தின் பெரும்பகுதி அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் சம்பளத்திற்கே செலவிடப்பட வேண்டுமெனவும், அபிவிருத்திப் பணிகளுக்குப் பணத்தை ஒதுக்குவது சவாலாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, அதற்கேற்ப மக்கள் சேவையை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு அடுத்த சில வருடங்களில் அரச வருமானம் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.