கொவிட் தொற்று பரவியுள்ள காலப்பகுதியில் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்குமாறு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன் அதனை திருத்துமாறு அரச நிர்வாக செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நேற்று முன்தினம் (21) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், பல பகுதிகளில் உள்ள பெண் ஆசிரியைகள் புடவை மற்றும் ஒசரிக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வந்திருந்தனர்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பல பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்கள் வசதியான உடையில் பாடசாலைக்கு வந்திருந்தமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இவ்வாறு சாதாரண உடையில் பாடசாலைக்கு வந்த ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் தலையிட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பாடசாலை பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.