COP27 காலநிலை மாற்ற மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று Sharm el-Sheikh இல் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பாரிய பொருளாதார மற்றும் சமூக நிலைமை மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய அவசர தேவை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய கடன் நெருக்கடியை சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள முறையில் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை மல்பாஸ் வலியுறுத்தியதோடு, கடன் மறுசீரமைப்பிற்கு விரைவாக உடன்படுவதற்கு இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் துறை கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
மல்பாஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பொதுச் செலவின முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பொது நிறுவனங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்கள், குறிப்பாக இலங்கையில் பொதுத்துறையின் உயர் திறனைக் கருத்தில் கொண்டு கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அடித்தளத்தை வழங்கவும் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் (IDA) சலுகை நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கை ஆலோசனைகளுக்கு இணங்க உலக வங்கி குழுவின் ஆதரவையும் தலைவர் உறுதியளித்துள்ளார்.
விவசாயத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு உரங்களின் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பெறுமதிச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், சுற்றுலா மற்றும் கல்வி மற்றும் சேவைத் துறைகளில் இலங்கையின் உயர் திறன்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கான வளரும் நாடுகளின் நிதித் தேவைகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தழுவல் மற்றும் தணிப்பு முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.