உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மாகாண சபைத் தேர்தலை எந்த வகையிலும் ஒத்திவைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயல்கிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கலாநிதி பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதனை எதிர்கொள்ளுமாறு கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் சார்பில் வேட்புமனுக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், நியமனச் சபைகளை நியமித்து அவற்றைக் கையாள்வதற்கான கட்சிப் பொறிமுறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.