பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக செயலமர்வு திட்டமொன்று புத்தளம் நகர மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, 16 நாட்களாக இடம்பெற்றதுடன் சர்வதேச சிவில் சமூகத்தின் தலைமையில் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கையாகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுவதற்கான சர்வதேச
தினமான நவம்பர் 25 அன்று ஆரம்பமாகும் இப்பிரச்சார நடவடிக்கை சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று முடிவடைகின்றது.
ஒவ்வொரு வருடமும் புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையத்தினால்(MWDT) இந்த வருடத்தின் கருப்பொருள்களுக்கேற்ப பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இம்முறை “வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைவோம்” எனும் சர்வதேச கருப்பொருளில் இன்றைய தினம் புத்தளம் நகர மண்டபத்தில் அண்மையில் பெண்களுடனான ஒரு நாள் ஒன்றுகூடல் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
முதற்கட்டத்தில் புத்தளம் மாவட்டத்தில் (MWDT) உடன் இணைந்து 10 வருடங்களுக்கும் மேலாக கிராம மட்டங்களில் பெண்களின் உரிமைக்காகவும் எழுச்சிக்காகவும் பணியாற்றிய மற்றும் பணியாற்றி வருகின்ற 25 பெண் ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வன்முறைகளில் இருந்து தப்பிப்பிழைத்த பெண் போராளிகள் பிரச்சினைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
புத்தளம் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், புத்தளம் மாவட்ட உதவி செயலாளர், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், புத்தளம் தள வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர், சிவில் சமூக அங்கத்தவர்கள், தேசிய அபிவிருத்தி வங்கியின் புத்தளம் பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
(தகவல் எம்.யூ.எம்.சனூன்)