21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரச சேவையின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும், பொது மக்களுக்கு எதிரான எந்தவிதமான பாகுபாடுகளையும் தடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ நகரில் இடம்பெற்ற இனப் பாகுபாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ குளோபல் மன்றத்தின் அமைச்சர்கள் அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட பாரபட்சமான இனவாத அரசியல் கலாசாரம் மற்றும் மத நல்லிணக்கம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அங்கு விளக்கியுள்ளார்.
கொவிட்-19 தொற்று மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற பல தடைகளுக்கு மத்தியில் அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மொழி, மதம், கலாசாரம் அல்லது பாலினம் என்ற பேதமின்றி அனைவருக்கும் சமத்துவத்தைப் பாதுகாக்க இந்நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது என்றும், அத்தகைய அடிப்படையில் எந்தவொரு நபருக்கும் ஏற்படும் அநீதிகளைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு வரம்பற்ற அதிகார வரம்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எந்தவொரு பாகுபாட்டையும் இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பெரிய மற்றும் பணக்கார நாடுகள் முன்மாதிரிகளை அமைத்து, தேவைப்படும் நாடுகளுக்கு உதவுவதன் மூலம் ஆற்றல்மிக்க பங்கை வகிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.