நேற்றையதினம் காலி, உனவடுனவில் ‘ரஜரட்ட ரஜின’ அதிவேக ரயிலில் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.
முச்சக்கரவண்டி சாரதியின் அஜாக்கிரதையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது இளம் மகளும் உனவட்டுன பகுதியில் தங்கியிருந்ததாகவும், நான்கு வயதுடைய தனது மகளை பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் இந்த கோர விபத்தை சந்தித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு இலங்கையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூலம் உறவினரை தொடர்பு கொள்ளும் வரை குழந்தை பகல்நேர பராமரிப்பு மையத்தில் இருக்கும்.
நேற்று காலை உனவட்டுன பிரதேசத்தில் பெலியஅத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின புகையிரதத்தின் முச்சக்கர வண்டி மோதியதில் ரஷ்ய பெண்ணும் அதன் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
புகையிரத கடவையின் எச்சரிக்கை சமிக்ஞை அமைப்பு செயலிழந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டியை முன்னோக்கி செலுத்த வேண்டாம் என சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கூறிய போதும் சாரதி அதனை புறக்கணித்து புகையிரத பாதையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.