உலகின் பார்வை இன்று ஒரே இடத்தில் குவிந்துள்ளது. ஆம்! அதுதான் நடந்துமுடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோடான கோடி கால்பந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய ஒன்றாகும்.
இந்தியாவிலும் கால்பந்திற்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.
கேரளா போன்ற மாநிலங்களில் மெர்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்குப் பிரம்மாண்ட கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதும், அதைக் கொண்டாடித் தீர்ப்பதும் வழக்கம்தான்.
இப்படி உலகத்தரம் வாய்ந்த விளையாட்டான கால்பந்தில், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாடு சறுக்குவது எங்கே?
இந்தியா 140 கோடி மக்கள் தொகை கொண்டிருந்தாலும், கால்பந்து உலகில் தடம் பதிக்கக்கூடிய 11 வீரர்களைக் கண்டுபிடித்து பயிற்சி அளிப்பதில் இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என்ற கேள்விகள் பலருக்கும் எழுகிறது.
தலைநகர் டெல்லியில் மட்டும் அரசு சார்பில் நகரில் ஒன்பது விளையாட்டு வளாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு வளாகங்களில் தடகளம், கபடி, யோகா, பேட்மிண்டன், ஹேண்ட்பால், சாஃப்ட் பால், டென்னிஸ், ஹாக்கி, வில்வித்தை, கூடைப்பந்து போன்றவற்றுக்கான பயிற்சிகளை வழங்குவதில் 35 பயிற்சியாளர்கள் உள்ள நிலையில் வாய்ப்புக்கேடாக 35 பயிற்சியாளர்களில் கால்பந்துக்கு என்று இருவர் மட்டுமே உள்ளனர்.
தலைநகரை வைத்தே மற்ற மாநிலங்களை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். கத்தாரில் நடந்து கொண்டிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு 32 அணிகள் கிராண்ட் டைட்டிலுக்காகப் போட்டியிடுகின்றன. ஆனால் இந்தியாவால் இதுவரை போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இருந்தும் இந்தியா முழுவதும் கால்பந்து ரசித்து விளையாடப்படுகிறது.
ஆனால் அதை விளையாடுவதற்குக் கொஞ்சம் ஊக்கமும் உயர்த்தி விடுவதற்கு அரசும் இல்லை. விளையாட்டுத் திறனை வளர்க்கும் அரசியல் விருப்பத்தை அதிகாரிகள் காட்டாததால் வீரர்களுக்கான வசதிகள், மைதானங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றே சொல்ல வேண்டும்.
டில்லியில் நடைபெறும் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடத்தப்படுகிறது. நவம்பர் 17ஆம் தேதி லீக் போட்டி ஒன்றைக் காண 50க்கும் குறைவான பார்வையாளர்களே மைதானத்தில் அமர்ந்திருந்தனர்.
டில்லி அரசு கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இது போன்ற போட்டிகளை ஒழுங்கமைக்கிறது. ஆனால் பார்வையாளர்களை ஈர்க்க இது போதாது.
மைதானத்திற்கு வெளியே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பார்வையாளர்களின் கேலரியில் நாற்காலிகள் உடைக்கப்பட்டு காலியாக இருப்பதுதான் மிச்சம். மக்கள் அங்கு இல்லை.
இந்தியாவில் கால்பந்து விளையாட்டு எப்போதுமே சீரழிந்து வருகிறது. இந்தியாவில் கால்பந்தின் வீழ்ச்சிக்கு கிரிக்கெட் ஒரு முக்கியக் காரணம். 1983 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டின் புகழ் அதிகரித்தது.
கால்பந்து உட்பட மற்ற விளையாட்டுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. இன்றும் குறைந்தபட்சம் ஒரு விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் அல்லது எம்.எஸ்.தோனி இந்தியாவில் உள்ள பல வீடுகளிலும் இருக்கும் அளவுக்கு ஒரு கால்பந்து வீரரின் புகைப்படம் இருக்குமா என்றால் கேள்விக்குறிதான் மிஞ்சும்.
மீடியாவாக இருந்தாலும் சரி பாலிவுட்டாக இருந்தாலும் சரி கிரிக்கெட்டுக்கு எப்போதுமே சலுகை உண்டு. செய்திச் சேனல்கள் கிரிக்கெட் குறித்த ஒருமணி நேர விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கிரிக்கெட் வீரர்கள் பற்றிய திரைப்படங்கள் அதிகமாக வருகின்றன.
ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனையையும் கேட்கலாம். செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கங்களில், தலைப்புச் செய்தி எப்போதும் கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும். இந்தியன் சூப்பர் லீக் தொடங்கிய 2014க்குப் பிறகு சில மாற்றங்கள் மட்டுமே காணப்பட்டன.
மாநில வாரியான வேறுபாடுகளைப் பார்த்தால் கேரளா, மேற்கு வங்கம், கோவா, வடகிழக்கு என எல்லா இடங்களிலும் கால்பந்தாட்டத்தை விரும்புபவர்களைப் பார்க்கிறோம். கேரளா, மேற்கு வங்கம் கால்பந்தாட்டத்திற்கான வளமான சூழலை வளர்த்துள்ளன.
அதேசமயம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் போன்ற சிறிய நகரத்தில் இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலிருந்தே கால்பந்து விளையாடப்பட்டு வருகிறது.
இன்றும் கோலாப்பூரில் உள்ள ஷாஹு ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதி கால்பந்துப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்குகின்றனர். இங்கு உலகக் கோப்பை போட்டிகள் திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.
கோலாப்பூரில் உள்ள கால்பந்து பயிற்சியாளர் அபிஜீத் வானிரே கூறுகையில், “இங்குள்ள குழந்தைகளிடம் நிறைய திறமைகள் உள்ளன. ஆனால் உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது. வீரர்கள் விளையாடுவதற்கு மைதானங்கள் இல்லை.
கோலாப்பூரில் தற்போது ஏ,பி பிரிவுகள் உள்ளன. சுமார் 40 அணிகள் உள்ளன. ஆனால் அவர்களுக்குச் சொந்த அல்லது அரசாங்க மைதானங்கள் இல்லை
அவர்கள் வைத்திருக்கும் மைதானங்களின் தரம் மிகவும் மோசமானவை. இது வீரர்களைக் காயப்படுத்துகிறது.
போபால், கோழிக்கோடு, மேற்கு வங்கம் போன்ற இடங்களுக்கு நான் வீரர்களை பல்கலைக்கழக அணியுடன் அழைத்துச் செல்லும் போதெல்லாம் புல் மைதானங்கள் தென்படுகின்றன. ஆனால் கோலாப்பூரில் அத்தகைய மைதானங்களை நம்மால் பார்க்க முடியவில்லை.
இருப்பினும் கோலாப்பூர் போன்ற பகுதிகளில் கால்பந்தின் மீதான ஆர்வம் இந்தியாவின் மற்ற பகுதிகளை எட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதையும் மீறி சந்தோஷ் டிராபி, ஐ லீக், ஐஎஸ்எல் போட்டிகளில் கேரள வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.’
லீக் கால்பந்து இந்தியாவில் நீண்ட காலமாக விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் 2014இல் இந்தியன் சூப்பர் லீக் தொடங்கப்பட்டதிலிருந்து கால்பந்து ஓரளவு பிரபலமாகிவிட்டது. லீக் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதனால் கால்பந்துக்கு புதிய ரசிகர்கள் கிடைக்கின்றார்கள். கால்பந்தை ஊக்குவிக்க AIFF தவறிவிட்டது.
இந்தியாவில் பழைய ஐலீக்கை விட புதிதாகத் தொடங்கப்பட்ட ஐஎஸ்எல் போட்டிகள் பிரபலமாக இருப்பதற்கு ஒரே காரணம் அவர்கள் செய்யும் ப்ரோமோஷன்தான்.
இந்தியாவில் அடிமட்ட அளவில் கால்பந்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. டெல்லி போன்ற இடங்களில் அரசு புதிய கால்பந்து மையங்களை ஏற்படுத்தி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
ஃபிஃபாவில் இந்தியா மோசமான தர வரிசையில் இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று கால்பந்து விளையாட்டைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாதது.
கால்பந்தின் காலநிலையைப் பலவீனப்படுத்தும் அரசியல் தலையீடுகள், அரசியல், வெளிப்புற தலையீடுகளுக்காக இந்திய கால்பந்து மீதான ஃபிஃபாவின் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அப்போதுதான் இந்தியா போன்ற நாடுகளில் கால்பந்து மீதான ஈர்ப்பை விட விளையாட்டின் தன்மை மேம்படும் என்பதே உறுதியாகும்.
(நன்றி: சமரசம் இதழ்)