இலங்கையில் மனிதவள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கி தூதரகம் மறுத்துள்ளது.
அதேநேரம் சமூக ஊடகங்களில் இது தொடர்பில் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தூதரகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகமோ அல்லது துருக்கிய உள்துறை அமைச்சகமோ இதுபோன்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை, எனினும் இது சில தனியாட்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக என்று தூதரகம் கூறியது.
ஒரு சமூக ஊடகப் பதிவைக் கண்டு துருக்கிய வேலைக்கான நேர்காணலுக்காக இலங்கை முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட நபர்கள் கொழும்புக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து வேலை தேடுபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து வன்முறையாக மாறிய நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரை ஈடுபடுத்த வேண்டியிருந்தது.
இதேவேளை கொழும்பில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலை தொடர்பான நேர்காணலுக்கு தவறான தகவல்களை வழங்கி பலரை ஏமாற்றிய குழுவைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
“துருக்கியில் சில வேலை வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த வகையான வேலை மோசடிகளுக்கு இரையாவதை விட, எங்கள் அதிகாரப்பூர்வ இணைய தகவல்களை பின்பற்றுமாறு வேலை தேடுபவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று அமைச்சர் கூறினார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) குறிப்பிட்ட வேலைகளுக்காக பதிவுசெய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேவேளை உத்தியோகபூர்வ கடிதங்களும் வருங்கால வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று நேர்காணலின் போது இலவச வேலைகள் வழங்கப்படுவதாகக் கூறி தனிநபர் ஒருவர் சமூக ஊடகங்கள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றியதாகவும், இதனால் நூற்றுக்கணக்கானவர்களை நேர்காணலுக்குத் தெரிவிக்குமாறும் தூண்டியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.