எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கூட்டாக எதிர்கொள்ள பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை,ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க,
43 ஆவது படையணியை அரசியல் கட்சியாகவோ அல்லது தேர்தலை இலக்காகக் கொள்ளவோ தாம் உத்தேசிக்கவில்லை என்றும், நாடு கடந்த வருடம் வங்குரோத்து நிலைக்குச் சென்றதை அடுத்து, அந்த இயக்கத்தை புதிய அரசியல் கட்சியாக மாற்றத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியுடன் (NLFP) இணைந்து 43 ஆவது படையணி உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் என்றும் ரணவக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வெல்கம, கட்சியில் இருந்து பிரிந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசியுடன் புதிய லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.