இந்தியாவின் தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள்’ என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வு சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்த கவிதை நூல் கடந்த நவம்பர் மாதம் ஷார்ஜா சர்வதேச புத்தக சந்தையில் வெளியிடப்பட்டது. அதற்கமைய, விற்பனையில் முந்திக் கொண்டிருக்கும் இந்நூலின் அறிமுக விழா சிங்கப்பூரில் முஸ்தபா சென்டர் எதிரில் இருக்கும் ஆனந்த பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கவிமாலை காப்பாளர் மா.அன்பழகனார் அவர்கள் தலைமை தாங்கினார்.
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக அவர் இருந்த போது, புனே சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் இந்தியாவின் சிறந்த இளம் சட்டமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து, அவர் இலக்கியவாதியாக வளர்ச்சிப் பெற்றுள்ளதை வரவேற்று பேசினார்.
மேலும், புதிய நிலா ஆசிரியர் மு.ஜஹாங்கீர் வரவேற்புரையாற்றும் போது, நூலாசிரியர் அவர்கள் சிங்கப்பூ ரோடும், சிங்கப்பூர் தமிழர்களோடும் கொண்ட தொடர்பை பற்றியும், அவரது தமிழ் பற்றையும் சிலாகித்து பேசினார்.
ஆல் இந்திய ரேடியோவின் முன்னாள் அறிவிப்பாளரும், இலக்கியவாதியுமான திருமதி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன் அவர்கள் நூலை திறனாய்வு செய்து பேசியதுடன் ஒவ்வொரு கவிதைகளும் மனிதாபிமானத்தை முன்னிறுத்தி புதிய கோணத்தில் அணுகப்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார்.
இதனையடுத்து, பிரபல தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பனார் அவர்கள் நூலை அறிமுகப்படுத்த, பிரபல தொழில் அதிபரும் சமூக ஆர்வலருமான எஸ்.எம். அப்துல் ஜலீல் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிர்வாகி முகம்மது யாசீன் , பிச்சினிக்காடு இளங்கோவன், கவி மாலை மதியழகன் உட்பட பல பிரமுகர்கள் அடுத்தடுத்த நூல்களை பெற்றுக்கொண்டனர்.
ஏற்புரையாற்றிய மு.தமிமுன் அன்சாரி உரையாற்றுகையில்,
ஹைக்கூ வடிவ இக்கவிதைகள் குறைந்த வார்த்தைகளில் ஒரு மணி நேரத்திற்குள் வாசித்து முடித்து விடும் அளவிலேயே எழுதி இருப்பதாகவும், இலக்கிய வட்டத்தையும் தாண்டி, பொது மக்களிடம் இக்கருத்துகள் எளிதாக சென்று சேர வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதியிருப்பதாகவும் கூறினார்.
மேலும், மொழி வழிக் கலாச்சாரத்தை பேண வேண்டும் என்றவர், தாய்மொழிக் கல்வியை பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும், பல மொழிகளையும் கற்க வேண்டும் , ஒரு மொழி , இன்னொரு மொழியை அழிக்கவோ, ஆதிக்கம் செலுத்தவோ கூடாது என்பது மட்டுமே நமது பார்வையாக இருக்க வேண்டும் என்றார்.
அதேநேரம், சிங்கப்பூர் அரசு தமிழ் மொழி மாதம் கொண்டாடுவதை வரவேற்றவர், தமிழை நான்கில் ஒரு அதிகாரப்பூர்வ மொழியாக பின்பற்றுவதற்காக சிங்கப்பூர் அரசையும், பிரதமர் லீக் வான் யூ அவர்களையும் பாராட்டுவதாக கூறினார்.
இதேவேளை இந்நிகழ்வை கவிஞர் இ.அஷ்ரப் அலி தொகுத்து வழங்கினார். ஆசியான் கவிஞர் இக்பால், மஜக இளைஞர் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், அன்பு அக்பர், ஜர்ஜிஸ் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்களும், கிரஸண்ட் முகம்மது யூசுப் உள்ளிட்ட பிரமுகர்களும்,பல சிங்கப்பூர் பிரபலங்களும் , சமூக செயல்பாட்டாளர்களும் அரங்கத்தை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.