இந்த ஆண்டு ஹஜ்ஜிற்கான யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை என்று சவூதி அரேபியா அறிவித்தது.
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போ நிறைவு பெற்றது. ஜனவரி 9 ஆம் தியதி தொடங்கிய இந்த கண்காட்சி, 12 ஆம் தியதி அன்று நிறைவுற்றது.
இதில், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்றனர். ஹஜ் சேவைகளை, வரும் ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளுக்காக இந்த எக்ஸ்போ நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து பேசிய, அந்நாட்டு அமைச்சர் ஃபவ்சான் அல் ரபியா,
ஹஜ்ஜில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்றும், இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு வயது வரம்பு இல்லை என்றும் கூறினார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் புனித யாத்திரையில் பங்கேற்றதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொற்றுநோய் பரவியதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யாத்ரீகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
முன்னதாக ஜனவரி 5 ஆம் திகதி, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், இந்த ஆண்டு ஹஜ் செய்ய விரும்பும் நாட்டில் வசிப்பவர்கள் புனித யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரபு செய்தி அறிக்கையின்படி அறிவித்தது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஹஜ் யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா அரசு, தங்கள் நாட்டை சேர்ந்த 1,000 பேரை மட்டும் யாத்திரை செல்ல அனுமதித்தது.