வெளிநாட்டு கடன் அட்டைகளின் மூலம் மோசடி செய்த இளைஞன் கைது!

Date:

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை இணையத்தின் ஊடாக கொள்வனவு செய்து மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய சந்தேக நபர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து சம்பாதித்த பணத்தில் கைத்தொலைபேசியை வாங்கிக் கொண்டு இணையத்தின் ஊடாக இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் வெளிநாட்டு கடன் அட்டைகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதாக இணையம் மூலம் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தது.

இதன்படி, கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கடந்த 5 ஆம் திகதி குருநாகல் தும்மலசூரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சுமார் 5 இலட்சம் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகள் அவரது கணினியில் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, சந்தேகநபர் இலங்கையிலிருந்து இணையம் ஊடாக சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை ஓர்டர் செய்து 10 முதல் 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் பெரும்பாலும் வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள், பல்வேறு உணவுகள் மற்றும் கேமராக்கள் மற்றும் கணினி உபகரணங்களை வாங்கியுள்ளார்.

சந்தேக நபர் பொருட்களை கொள்வனவு செய்ய பயன்படுத்திய கடன் அட்டைகள் சுமார் 10 வெளிநாடுகளுக்கு சொந்தமானது எனவும், சர்வதேச ரீதியில் தகவல்களை பெற கடினமாக உள்ள நாடுகளையே அவர் தெரிவு செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில கடன் அட்டைகள் வெளிநாட்டு வங்கிகளால் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18 வயதுடைய சந்தேகநபர் இந்த மோசடியை எவ்வாறு மேற்கொள்வது என்பதை யூடியூப் மூலம் கற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (06) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கிய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...