சமுர்த்தி பயனாளிகள் உட்பட இரண்டு மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இரண்டு மாத காலத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
40,000 மெட்ரிக் தொன் நெல் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 61,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகளின் உதவியுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சமுர்த்தி பயனாளிகள் உட்பட சுமார் 2 மில்லியன் குடும்பங்கள் உள்ளன. ஏப்ரல் 2023 வரை இந்த குழுவிற்கு அரசாங்கம் கூடுதல் நிதியை வழங்கியிருந்தாலும், இந்த குறைந்த வருமானம் பெறுபவர்களை மேலும் ஒரு காலத்திற்கு கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
2022/2023 இப் பருவத்தில் நெல் அறுவடை முந்தைய பருவத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க கூடுதல் ஆதரவை வழங்க நெல்லின் ஒரு பகுதியைப் பயன்படுத்துவது பொருத்தமானது.