தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் நாயகம் திருமதி கன்னி விக்னராஜா, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்த மீட்சிக் காலத்தில் இலங்கைக்கான ஐ.நாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் தலைமையில் இன்று (4) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீண்டகால மீட்சி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இந்த கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பிரதிநிதிகள் அங்கீகரிப்பதோடு, பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபித்தல் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் உட்பட நாட்டில் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த குழுவினருக்கு விளக்கமளித்தார்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை தூதுக்குழுவினர் வரவேற்றனர். ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச விவகார பணிப்பாளர் தினூக் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.