துருக்கியில் கடந்த 6ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. துருக்கியில் மட்டும்9,700 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், சிரியாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 800 -ஐ கடந்துள்ளது.
இரு நாடுகளிலும் சுமார் 42 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதாக அதிபர் எர்டோகன் (Erdogan) தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 50,000 க்கும் மேற்பட்டோரை அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்கு இரண்டாவது நாளாக இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் கொரியா, ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு நிவாரண நிதி, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப தொடங்கியுள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு பல்வேறு நாட்டினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.